Showing posts with label அஷ்டகம். Show all posts
Showing posts with label அஷ்டகம். Show all posts

Friday, 5 April 2013

துக்க நிவாரண அஷ்டகம்...

காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம் Kamakshi Dhukka Nivarana Ashtakam

மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....

Friday, 15 March 2013

தத்தாத்ரேயர்

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்"


"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!