நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக
விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள்
சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு
துயரமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் இருந்து வருவது கண்டு
உண்மையிலேயே மனவேதனை அடைகீறிர்களா? இந்நாட்டில் வாழும் மனிதர்கள் எல்லாம்
உங்கள் சொந்த சகோதர்களே என உணர்கீறிர்களா? இவ்வுணர்ச்சி உங்கள் உடம்பு
முழுவதிலும் ஊறிப் போயிருக்கிறதா? அது உங்கள் குருதியில் கலந்து
ஓடுகிறதா?உங்கள் நரம்புகளில் அது துடிக்கிறதா? உங்கள் உடம்பின் ஒவ்வொரு தசை
நாரிலும் அது ஊடுருவி நிற்கிறதா? அந்த அனுதாப உணர்ச்சி உங்களுக்குள்ளே
பொங்கித் ததும்புகின்றதா? அவ்வாறாயின் முதற்படி எறிவிட்டிர்கள்.
அடுத்தாற்போல் பரிகாரம் ஏதேனும் கண்டு பிடித்திர்களா என்று சிந்திக்க
வேண்டும். பழைய கொள்கைகள் மூடக்கொள்கையாக இருக்கலாம்.
ஆனால் அந்த
மூடக்கொள்கைத்திரளின் உள்ளே சத்தியம் என்னும் தங்கக்கட்டிகள் புதைந்து
கிடக்கின்றன. குப்பையைப் போக்கி விட்டுத் தங்கத்தை மட்டும் வைத்துக்கொள்ள
நீங்கள் வழி கண்டுபிடித்திருக்கீறிர்களா? மூன்றாவது இன்னும் ஒன்று அவசியம்.
உங்கள் நோக்கம் என்ன? பொன்னாசை, புகழாசை, அதிகார ஆசை என்னும் இவை
உங்களிடம் அறவே இல்லையென்று நிச்சியமாக சொல்ல முடியுமா?
ஆயிரக்கணக்கான மனிதர்களால் மேடைப்
பிரசங்கங்கள் செய்யப்பட்டு விட்டன. இந்து சமூகத்தின் மீதும், இந்து
நாகரிகத்தின் மீதும் கணக்கில்லாத கண்டங்களை சொரிந்தாகிவிட்டது.எனினும்
செயல்முறையில் நற்பயன் எதுவும் விளையக்காணோம். இதன் காரணம் என்ன? காரணம்
கண்டுபிடிக்க அதிக சிரமப்படவேண்டியதில்லை. கண்டனத்தில் தான் காரணம்
இருக்கிறது. நன்மை புரிவதற்கு வழி கண்டனம் செய்தல் அன்று.
எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை
இல்லை, வளர்ச்சியிலேயே நம்பிக்கை உண்டு. நானே கடவுளின் இடத்தில இருப்பதாக
எண்ணிக்கொண்டு, ‘இவ்வழிதான் போக வேண்டும்; அவ்வழி நோக்கக்கூடாது’ என்று
சமூகத்துக்கு கட்டளைகள் பிறப்பிக்க எனக்கு துணிவு இல்லை.
என்னுடைய இலட்சியம், தேசிய வழிகளில் வளர்ச்சிப் பெருக்கம், முன்னேற்றம் என்னும் இவைகளாகும்.
No comments:
Post a Comment